Thursday, March 15, 2012

உன் தோழி




கல்லும் முள்ளும் நிறைந்த உன் வாழ்க்கை பாதையில் 
மலர்பாதையாக என்றும் நான் உன்னுடன் 
உன் மேல் அன்புகொண்ட 
உற்ற தோழியாக நானிருக்க 
உன் நெஞ்சில் வலி எதற்கு 
கண்ணில் நீர் எதற்கு 

விழியிலே துணிவிருக்க - நீயும் 
விந்தை உலகில் உன் சாதனை  நிலை நாடிடு 
விடியலை நோக்கி பயணம் செய் 
உன் வெற்றிக்கு உன்னோடு  என்றும் 
உற்ற தோழியாய் நான் 

வாழும் வழிகள் பல இருக்கு 
வாழ்ந்து காட்டு உலகிற்கு 
நம்பிக்கை என்னும் தனம்பிகையோடு 
முயற்சி செய் 
நாளைய வெற்றி உன்கையில் 
நீ உன் வாழ்வில்  வெற்றி பெற  
என்றும் என் பிரார்த்தனைகள் உனக்காகவே 





Wednesday, March 14, 2012

காதலை பரிமாறும் அழகான தருணங்கள்!



காதல் என்ற வசந்தம் அனைவரின் வாழ்க்கையிலும் வருவதில்லை. ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே காதல் வாய்க்கும். காதல் வயப்பட்டிருப்பவர்கள் அனைவரும் இறகு முளைத்தது போல சதா வானத்தில் மிதந்து கொண்டிருப்பார்கள்.

 
காதலனிடம் இருந்து சின்ன எஸ்.எம்.எஸ் வந்தாலே அன்றைய சந்திப்பை பற்றி அந்த நொடியில் இருந்தே கனவு காண தொடங்கிவிடுவார்கள். காதல் எல்லோருக்குமே வாய்ப்பதில்லை. ஆனால் குறிஞ்சிப் பூவாய் கிடைத்த காதலை எத்தனை பேர் வெற்றிகரமாக தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றால் 50 சதவிகிதம் பேர் இல்லை என்று தான் கூறுவர்.

 
படிக்கும் போது தோன்றிய காதல் பணிச்சூழல், பொருளாதார சூழ்நிலைகள் போன்ற காரணங்களினால் படிப்படியாக மறைந்து போவதும் உண்டு. அப்படியே வெற்றி பெற்று அது திருமணம் வரை கணிந்தாலும் நாளடைவில் கசந்து காதல் காணமல் போய்விடும். எனவே காதலித்து திருமணம் செய்தவர்கள் கடைசி வரை காதலை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொள்ள வல்லுநர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள்:

 
திருமணம் முடிந்த உடன் முதலில் செய்ய வேண்டியது இருவரின் குடும்பத்தைப் பற்றியும், வருங்காலத்தைப்பற்றியும் பேசவேண்டும். இருவரும் இணைந்து எதிர்காலத்தை பற்றி பேசுவதன் மூலம் நம்பிக்கை அதிகரிக்கும். காதலும் உறுதிப்படும்.

 
காதலிக்கும் போது என்னென்னவோ பரிசுகள் கொடுத்திருக்கலாம் திருமணத்திற்குப் பிறகும் அது தொடரவேண்டும். பிறந்தநாள், திருமணநாள், காதலர் தினம் என சிறப்பு நாட்களில் மட்டும்தான் பரிசு கொடுக்க வேண்டும் என்பதில்லை. துணையை குஷிப்படுத்த அடிக்கடி சர்ப்ரைஸ் பரிசு கொடுங்கள்.

 
காதலிக்கு நீங்கள் வழங்கும் மிகச்சிறந்த பரிசுப்பொருள் உங்களின் பரிசுத்தமான அன்புதான். எனவே இதயப்பூர்வமாக உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.

 
பேசுவது நீங்களாக மட்டுமே இல்லாமல் கேட்பவராகவும் இருங்கள். உங்கள் காதலியை அதிகம் பேச விடுவது காதலுக்கு அதிக நன்மை பயக்கும். எப்பொழுதும் பிறரிடம் இருந்து மட்டுமே எதிர்பார்த்து கொண்டிருக்காதீர்கள். நீங்கள் கொடுப்பவராகவும் இருங்கள்.
 

உம்மென்று இருக்க வேண்டாம். அடிக்கடி சிரித்து பேசி உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள். அதற்காக ஜோக்கடிக்கிறேன் என்ற பெயரில் கடித்து கஷ்டப்படுத்த வேண்டாம்.

 
விடுமுறை தினம் என்றாலே தூங்கிதான் பொழுதை கழிக்க வேண்டும் என்பதில்லை. திட்டமிட்டு எங்காவது சென்று வாருங்கள். காதலை புத்துணர்வாக்க இது சிறந்த வழி.

 
எப்பொழுதும் கையில் சாக்லேட் வைத்திருங்கள். அவசரகாலங்களில் ஆபத்பாந்தவனாக உதவுவது அந்த சாக்லேட்தான். சண்டையின் போது சமாதானத் தூதுவனாக உதவுவதும் அந்த சாக்லேட்தான்.

 
வாழ்க்கைத் துணையை உடல் ரீதியாக பார்க்காதீர்கள். உணர்வு ரீதியாக பார்ப்பதே காதலை வலுப்படுத்தும். அடிக்கடி பாராட்டுங்கள். அது அன்பை ஆழப்படுத்தும். எந்த சந்தர்ப்பத்திலும் மட்டம் தட்டி பேசாதீர்கள். முக்கியமாக உங்கள் துணையைப் பற்றி நட்பு வட்டாரங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

 
வார விடுமுறையை கொண்டாடுங்கள், அன்பை பரிமாறுங்கள். அது இருவருக்குமிடையேயான காதலை வளர்க்கும். மனைவியோ, காதலியோ பேசும் முன்பு யோசித்து பேசவும், எந்த ஒரு வார்த்தையும் காதலுக்கு எதிராக திரும்பிவிடக்கூடாது. அலுவலகத்திற்கு இருக்கும் சமயங்களில் கூட ஐ லவ் யூ எஸ்.எம்.எஸ் அணுப்பலாம். அது அலுவலக மன உளைச்சலை சற்றே தணிக்கும். உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.
 

இருவருக்கும் பிரச்சினை என்றால் யார் விட்டுக்கொடுப்பது என்பதில் ஈகோ வேண்டாம். பிரச்சினையை தீர்க்க விட்டுக்கொடுப்பவர் நீங்களாக இருங்கள். பிரச்சினை தோன்றிய இடம் காணமல் போய்விடும்.




தோல்விகள் இல்லாமல் வெற்றி இல்லை



“உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?’ என்ற பொன்மொழியை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். உழைப்பாளர் தினம் என்று இன்றைக்கு உழைப்புக்கும், உழைப்பாளிகளுக்கும் நாம் பெருமை தருகிறோம். அத்தகைய உழைப்பை நீங்கள் விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும், உங்கள் வாழ்க்கை முழுவதும். நீங்கள் ஒரு லட்சியத்தை நோக்கிச் செல்ல வேண்டும். இந்த லட்சியப் பாதையில் உங்கள் பயணம் தொடர்ந்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும் அவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் – அஞ்சாமல் நீங்கள் முன்நோக்கிச் சென்று கொண்டிருக்க வேண்டும்.

தளராத ஊக்கத்தைக் கொள்ளுங்கள்
நீங்கள் எண்ணுகின்ற எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக இருக்க வேண்டும். நீங்கள் அடைய விரும்புகின்ற குறிக்கோள் உயர்ந்த தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். வெறும் எண்ணத்தோடு நின்றுவிடாமல், என்ன செய்யவேண்டும் என்று திட்டமிட்டு, அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் இடைவிடாத முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் உங்களுக்கு ஊக்கம் வேண்டும். தளராத ஊக்கம் இருந்தால்தான் இடைவிடாத முயற்சிகளை நீங்கள் செய்ய முடியும்.
"ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை"
என்ற வள்ளுவரின் கருத்தை நினைவில் கொள்ளுங்கள்.

விருப்பமில்லாமல் வாழ்க்கையில் நல்ல திருப்பமில்லை
நீங்கள் சிறந்த தொழிலதிபராக வர வேண்டும் என்று மிகவும் விரும்புகிறீர்கள். நீங்கள் எந்தத் தொழிலைச் செய்ய விரும்புகின்றீர்களோ, அந்தத் தொழிலில் அதிக நாட்டம் கொண்டு உழைக்க வேண்டும். முயற்சியும், உழைப்பும் இருந்தால் நீங்கள் விரைவில் முன்னேறி விடலாம். அம்பானி சகோதரர்கள் மிகச்சிறந்த தொழிலதிபர்களாக விளங்கிக் கோடிக்கணக்கான பணத்தை ஈட்டி முதன்மை இடத்தில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. இந்த அளவுக்கு அவர்கள் உயர்வடைந்ததற்குக் காரணம், அவர்கள் தொழில் மேல் கொண்ட விருப்பமே ஆகும். விருப்பமில்லாமல் வாழ்க்கையில் நல்ல திருப்பமில்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டில் பலஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து உலக சாதனை படைத்திருக்கிறார் என்று சொன்னால், அதற்கு முக்கியக் காரணம் சச்சின் கிரிக்கெட் விளையாட்டின் மீது கொண்ட ஆர்வமே. ஆர்வம் இருந்தால் முயற்சி தானாகவே வந்துவிடும். அதன்பிறகு கடுமையான உழைப்பும் உங்களைத் தேடிவந்துவிடும். இவைகள் எல்லாம் ஒன்று சேரும் போது உங்களுக்கு வெற்றி கிடைக்காமல் போகுமா?


ஒரே குறிக்கோளுடன் உழையுங்கள்
நீங்கள் இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். சிறந்த தொழில் அதிபராகத் திகழ வேண்டும் என்று நினைக்கும் நீங்கள், ஒரே மாதத்தில் உயர்ந்துவிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அவ்வாறெல்லாம் நீங்கள் நினைத்துப் பார்க்கக்கூடாது. உங்களுடைய லட்சியம் வெற்றி பெறும்வரை பொறுமையாக இருக்கவேண்டும். “பொறுமை கடலினும் பெரிது’ என்பதை மறந்துவிடாதீர்கள்’. “சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்’ என்று நரி திராட்சைத் தோட்டத்தை வெறுத்து ஓடிப்போன கதையாக உங்களுடைய செயல்களும் அமைந்துவிடக் கூடாது. “இந்தத் தொழில் எனக்குப் பிடிக்கவில்லை. நான் உயர்வடைவதற்கு நீண்ட காலத்தாமதம் ஆகும் போலத் தெரிகிறது. எனவே வேறு தொழிலை நான் நாடிச் செல்கிறேன்’ என்று சென்று விடாதீர்கள். நீங்கள் ஒரே நோக்கம், ஒரே லட்சியம் ஆகியவைகளைக் கொண்டிருக்க வேண்டாமா? குறிக்கோள்களை நீங்கள் மாற்றிக் கொண்டே இருந்தால் உங்களுடைய உயர்வு சிதைந்து போகாதா?


ஒரே துறையில் இறுதி வரை போராடுங்கள்
சாதாரண எறும்புகளைப் பாருங்கள். ஊர்ந்து ஊர்ந்து சென்று கடினமான கல்லைக் கூடத் தேய்த்துவிடுகிறது. எனவே ஒரே லட்சியத்தில் முயற்சி மட்டும் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறலாம். ஒரு வேளை நீங்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கும் துறையில் தோல்வி ஏற்பட்டால் மனம் சோர்ந்து போய் விடாதீர்கள். அத்துறையில் மீண்டும் மீண்டும் கவனத்தைச் செலுத்தி, முன்னுக்கு வரும் வழிகளை ஆராய்ந்து பார்த்து அத்துறையில் வெற்றி பெறுங்கள். கொள்கைகளை மாற்றிக் கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாகச் சரித்திரம் கிடையாது. அரசியலில் வேண்டுமானால் கொள்கைகளை மாற்றிக் கொண்டு “கே(ô)டீஸ்வரர்கள்” ஆனவர்கள் உண்டு. ஒரே துறையில் இறுதிவரை போராடிக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்க வேண்டும். இப்படி நீங்கள் கடுமையாக உழைப்பதன் மூலமே வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும்.


தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்
கடுமையான உழைப்பு வீண் போனதாகச் சரித்திரம் கிடையாது. கடுமையான உழைப்பாளி வெற்றி பெற்ற வரலாறே இங்கு அதிகம். கடுமையாக உழைக்கும் உழைப்பாளி தோற்றுப் போனதாக எவரையேனும் நீங்கள் சொல்ல முடியுமா?
நீங்கள் கடுமையாக உழைப்பதற்குத் தூண்டுகோலாக இருப்பது, உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையே. தன்னம்பிக்கை என்ற ஆணிவேர் இல்லாவிட்டால் நீங்கள் என்ன உழைத்தும் பயனில்லாமல் போய்விடும். தன்னம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால் உங்களுக்கு எப்போதும் மனதில் மலர்ச்சி இருக்கும். தன்னம்பிக்கை உங்களுக்கு இல்லாவிட்டால் உங்களுக்கு விரைவில் தளர்ச்சி வந்துவிடும். தளர்ச்சி வந்துவிட்டால் பிறகு உழைப்பதில் நாட்டம் வருமா என்ன? எனவே உங்களின் செயல்களின் மேல் – ஏன் உங்களின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அந்தத் தன்னம்பிக்கை இருக்குமானால் நீங்கள் எதையும் சாதிக்கலாமே.


பொறுமையும், விடாமுயற்சியும் வேண்டும்
நீங்கள் பொறுமையோடு, விடாமுயற்சியையும் தொடர வேண்டும். நீங்கள் தன்னம்பிக்கையோடு ஒரு செயலைச் சாதிக்க முற்படும்போது சோதனைகள் உங்களுக்கு வரத்தான் செய்யும். சோதனைகள் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கும் போதனைகள் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். எனவே சோதனைகள் வரும் போது மனதில் வேதனை கொள்ளாமல் சாதனைகளைப் படைப்பதில் நாட்டம் கொள்ளுங்கள். நீங்கள் கடுமையாக உழைத்துக் கொண்டே இருங்கள். அதே சமயத்தில் மிகச்சிறந்த வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். வெற்றி பெறுவதற்குக் காலம் கூடி வரும். அதுவரையில் நீங்கள் பொறுமையோடு இருங்கள்.


அவமானங்களைத் தாங்கிக் கொள்ளுங்கள்
ஸிங்க்ளேர் லூயிஸ் என்ற அமெரிக்க எழுத்தாளர் ஆராய்ச்சிக் கட்டுரையொன்றை ஆறு மாத காலமாக இரவு, பகலென்று பாராமல் எழுதிக் கொண்டே இருந்தார். எழுதி முடித்ததும் ஒரு பத்திரிக்கை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார். எவரும் இவருடைய கட்டுரையைப் படித்துப் பார்க்க விரும்பவில்லை. அந்தப் பத்திரிக்கை ஆசிரியர், “இடியட், இந்தப் பத்திரிக்கைக்கு உன் கட்டுரையைக் கொடுக்க வந்துவிட்டாய், உன் கட்டுரை இடம் பெறவேண்டிய இடம் எது தெரியுமா?’ என்று கூறிக்கொண்டே, கட்டுரையைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார். லூயிஸ் கோபம் கொள்ளவில்லை. தனக்கு ஏற்பட்ட அவமானம், சோதனைகளைத் தாங்கிக் கொண்டார். இவரது பொறுமையும், சகிப்புத் தன்மையும், விடாமுயற்சியும் வெற்றிப் பாதைக்கு இவரை அழைத்துச் சென்றது. இவர் எழுதிய “மெயின் ஸ்டிரீட்’ என்ற நாவல் உலகத்திலேயே எந்தப் புத்தகமும் விற்காத அளவுக்கு விற்பனையாயிற்று. இவரைக் கோடீஸ்வரர் ஆக்கிவிட்டது. லூயிஸ் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டிருந்தார். தன் திறமையைப் பிறர் கேவலப்படுத்தும்போது அதன் காரணமாக அவர் மனத்தளர்ச்சியடைய வில்லை. முயற்சி, உழைப்பு ஆகியவைகளைத் தன் வாழ்க்கையில் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தார்.


பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுங்கள்
எனவே வாழ்க்கையில் எந்த வித முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் எவரும் முன்னுக்கு வர முடியாது. திட்டமிட்டு உழைத்து, அந்த முயற்சியின் மூலம் வாழ்க்கையில் உயர வேண்டும். தகுந்த முயற்சிகள் இல்லாவிட்டால் வாழ்க்கையில் நாம் நினைத்ததெல்லாம் நிறைவேறிவிடாது என்பதை உணர வேண்டும்.
உங்களுடைய வாழ்க்கையில் வறுமையும், பிற தொல்லைகளும் உங்களை வாட்டி வருத்துகின்றனவா? இதற்காக நீங்கள் வருந்தாதீர்கள். எப்பேர்பட்ட மோசமான சூழ்நிலையாக இருந்தாலும் வாழ்வதில் ஆர்வமும், நம்பிக்கையும் கொண்டிருக்க வேண்டும்.
உங்களுடைய லட்சியப் பயணத்தில் சில சங்கடங்களும், பிரச்சனைகளும் வரத்தான் செய்யும். இதற்காக நீங்கள் கொஞ்சம் கூடக் கவலைப்படக் கூடாது. வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சனைகள் தோன்றினாலும் அதை நீங்கள் எதிர்த்துக் கொண்டு சமாளிக்க முற்பட்டால், நீங்கள் நினைப்பதெல்லாம் எளிதாக நிறைவேறிவிடும்.


மனத்தின் வலிமையைப் பெருக்குவன, துன்பங்கள் தாம்!
எனவே உங்களுடைய வாழ்க்கையில் சங்கடங்களும், இடையூறுகளும் ஏற்படுகின்றனவே என்று மன அதிர்ச்சியும், வியப்பும் கொள்ளாமல் அவைகளை நீங்கள் வரவேற்று மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும். உங்களுடைய அறிவையும், திறமையையும் தொடர்ந்து பயன்படுத்துங்கள். வாழ்க்கையில் பிரச்சனைகளே இல்லாவிட்டால், உங்களுடைய அறிவையும், திறமையையும் பயன்படுத்தவே முடியாமல் போய்விடும். வாழ்க்கையில் தோன்றுகின்ற இடையூறுகளும், துன்பங்களும், சிக்கல்களும், தொல்லைகளும் உங்கள் மனத்தின் வலிமையைப் பெருக்குகின்றன. எனவே இவைகளைக் கண்டு எப்போதும் பயப்படாதீர்கள்.


அச்ச உணர்வை அகற்றுங்கள்
நீங்கள் ஒரு செயலைச் செய்து முடிக்க அஞ்சுகிறீர்களா? உங்களுக்கு அச்சம் இருக்கிறது என்று சொன்னால் அதற்கு முக்கியக் காரணம், உங்களுக்குத் தன்னம்பிக்கை இல்லை. உங்களுக்கு மன உறுதி இல்லை என்று அர்த்தம். எனவே அச்சத்தை நீக்கி வாழுங்கள். திறமையற்றவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லாதவர்களுக்கு – தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கு எப்போதும் பயம் இருந்துகொண்டு தான் இருக்கும்.


தோல்விகள் இல்லாமல் வெற்றி இல்லை
நீங்கள் எந்தக் காலத்திலும் கடுமையாக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். உங்களுடைய முன்னேற்றத்தில் நீங்கள் நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கையே வாழ்க்கையின் அடிப்படை. நீங்கள் உழைக்கும்போது சில தோல்விகள் வரத்தான் செய்யும். தோல்விகள் இல்லாமல் வெற்றி இல்லை. எனவே தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள். உழைத்துக் கொண்டே இருங்கள். உயர்வு வராதா பார்க்கலாம்.

எப்படி வாழ வேண்டும்?



மனிதன் எப்படி வாழ வேண்டும்? தொல்லை கொடுப்பவனுக்கு தொல்லை கொடுத்து, ஊர் வம்புகளை உரக்க பேசி, அவனை பற்றி இவனிடமும் இவனை பற்றி அவனிடமும் பேசி, நமது வளர்ச்சியில் சந்தோஷத்தையும், மற்றவர்களின் வளர்ச்சியில் பொறாமையும் கொண்டு, மற்றவர்களை திட்டி, சபித்து, புறம் பேசி, அவதூறுகளையும், வேண்டாதவைகளையும் பேசி ஆர்ப்பாட்டம் செய்து வாழ்வதுதான் வாழ்வா...... 

நல்லவனாக, மனிதனாக, சாமியாராக, பெரியவனாக, உண்மையுள்ளவனாக நடித்து வாழ்வதுதான் வாழ்வா, ஒரு பண்பை கடைபிடிக்க முடியவில்லை என்பதற்காக அதை போல வேஷம் போட்டு வாழ்வதுதான் வாழ்வா?  மனிதன் எப்படி வாழ வேண்டும்?

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, நான், என்னுடையது என்ற சுயநலத்தை மறந்து, இந்த சமுதாயம் நமக்கு கெட்டதை கற்றுக் கொடுத்தாலும் நாம் இந்த சமுதாயத்திற்கு நல்லதை கற்றுக்கொடுத்து,  மற்றவர்களை திருத்துவது எப்படி என்று யோசிக்காமல், தன்னை திருத்துவது எப்படி என்று யோசித்து, அன்போடு, பண்போடு, நல்ல எண்ணங்கள், சிந்தனைகள், பழக்கவழக்கங்களோடு வாழ்வதுதான் வாழ்வு
கடைபிடிக்க வேண்டிய எத்தனையோ நற்பண்புகள் இருக்கும் போது அவைகளையெல்லாம் விட்டு விட்டு வீண் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பன்றிகள் சாக்கடையிலே புரள்வதை போல வீண் செயல்களிலும், பேச்சுகளிலும் காலத்தை விரயம் செய்கிறோம் என்றால் நற்பண்புகளில் எந்த சுவையையும் உணர முடியவில்லை, உலக கவர்ச்சிகளே மனதை ஈர்த்துக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்.


நல்ல பண்புகளின், செயல்களின், பேச்சுகளின் சுவையை உணராமல் அவைகளை கடைபிடிக்க முடியாது, நல்ல நண்பர்கள், ஆசிரியர்கள், முளையிலேயே அறிவூட்டுகின்ற பெற்றோர்கள் அமையாமல் போனால் மனிதன் வாழக்கூடாத வாழ்வையே வாழ்ந்துகொண்டிருப்பான். காலம் கடந்தாலும் பரவாயில்லை வீண் வாழ்க்கையை விட்டு விலகுங்கள், உங்களுக்கு நீங்களே குருவாக, நண்பனாக இருந்து சுய அறிவோடு ஒரு புதிய வாழ்வை உணருங்கள்.

சரியான கொள்கையோடு, உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்பவர்களாக, தீய குணங்களை வெல்ல தன் மனதோடு போராடுபவர்களாக, மனதை கட்டுபடுத்தியவர்களாக, எதற்கும் முட்டி மோதாமல் சகிப்பு தன்மை உடையவராக, கோபத்தை, ஆத்திரத்தை குறைத்து, கண்ணியத்தை கடைபிடிப்பவராக உங்களை புதிய உலகத்தை நோக்கி நகர்த்த ஆரம்பித்தீர்களென்றால் நற்குணங்களின் சுவையை உணர துவங்குவீர்கள், மனிதனாக வாழ்வது எப்படி என்பதை கற்றுக் கொள்வீர்கள்.

Saturday, February 11, 2012

நட்பே உறவை வளர்க்கும்




தாய்-மகள், தந்தை -மகன் , அண்ணன்-தம்பி , அக்கா-தங்கை, தொழிலாளி  -முதலாளி   
என்று எல்லா உறவுகளிலும்  நட்பே வேண்டும். சக தொழிலாளர்களிடம் நட்பு, பிற மொழியினரிடம்    நட்பு, பிற நாட்டவரிடம் நட்பு என்று அனைத்திலும்  நட்பு இருந்தால் தான் வீடு, ஊர், உலகம் என்று எல்லாமும் மலர்ந்திருக்கும் 
                            நட்பு என்பது இரத்த உறவைப்போல பிறப்பில் வருவதில்லை. அதை  நாம் தான் வளர்த்துக்கொள்ளவேண்டும்.நண்பர்களாய் இருந்த இருவர் இரத்த உறவு சகோதரர்களாய் ஆவதில்லை     ஆனால் சகோதரர்களாய் இருக்கும் இருவர் நண்பர்களாய் ஆகிறார்கள். அது தான் அவர்களின் சகோதர உறவையும் நெடுநாளையதாகவும்  வலுவானதாகவும் மாற்றுகிறது  . ஆனால் காதலர்களும் கணவன் மனைவியரும் அப்படியானவர்கள்  அல்ல. அவர்களுக்கு இரு வழிகளில் நட்பு வர வழி இருக்கிறது . காதலர்களாய்      ஆனபின் அல்லது கணவன் மனைவியாய் ஆனபின் நட்பை வளர்த்து கொள்ளலாம். அல்லது நண்பர்களாய் இருந்து காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ ஆகலாம் எப்படி ஆயினும்  உலக உறவுகளுக்கெல்லாம் உண்மையான இணைப்பாய்   இருப்பது நட்புதான்.



                          ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பொருளாதார பந்தமே உறவாக இருந்தால் அதில் அவ்வப்போது விரிசல் தான் விழும். இருவர்க்கும் இடையில்  நட்பு என்பது உறவாக இருந்தால் அவர்களை அசைக்க எவராலும் இயலாது  .
                            காதலன் காதலிக்கு இடையில் கவர்ச்சி மட்டுமே பந்தத்தை உருவாக்கி இருந்தால் அந்தக்காதல் நாலு நாளில் செத்துபோகும். உண்மையான நட்பு அவர்களின் பந்தத்தைஉருவாக்கி இருந்தால் அவர்கள் வாழ்க்கை என்றென்றும்   உயரத்திலே இருக்கும் வாழ்வின் அனைத்திற்கும்     நட்பே தேவை. நட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான் இரு தலைவர்களுக்குள் நட்பு என்றால் இரு நாட்டின் உறவும் அமைதியும் வலுப்படும். இரு மதத்துக்குள்    நட்பு என்றால் அப்ப்பா......... எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படும்.
                             நட்பு வழியே காதல் மலர்ந்தால் அது வாழ்வின் மழை   ; காதல் வந்தும் நட்பை இழந்தால் அது அந்த உறவின் மரணம்! காதல் கூட நட்பை இக்கசெய்வதிலை  திருமணம்  தான் அதை சிலரிடம் செய்துவிடுகிறது கணவன் மனைவி என்று ஆனதும் தங்களின் நட்பை இந்துவிடுகிறார்கள்  சிலர். அத்தனை  பலவீனமான நட்பாய் அவர்களின் நட்பு இருந்திருக்குறது என்றால் அது உண்மையான     நட்பா??  உண்மையான நட்பு இருந்தால் உயிர் போகும் போதும் உறவு போகாது! எல்லோரும்  நல்ல  நட்புடைய நண்பர்களாய் இருங்கள். மற்ற உறவுகள் அனைத்தும்   தானே வரும், வளரும், நிலைக்கும், வாழ்வு வளமாகும்!
எனவே நண்பர்களே நட்பின் மூலம் உறவை வளர்த்து கொள்ளுங்கள் 


Monday, January 23, 2012

இதய திருடன்





இனிய மொழிகளால் பேசியும் 

இதமான உன் பரிசத்தாலும் 

இமைகளை விழித்திருக்கையிலேயே 



இதயத்தை திருடியபோது 


இளைய கன்னி இவள் 

இன்பமாய் அனுமதித்தாள்


உன் இதயத்தோடு இணைவதற்கு





இடை நடுவே நீயோ 

இரக்கமே இல்லாமல் 

இடறி விட்டு சென்று-நீ 

இன்பமாய் இருந்தாய் - நானோ

இளவு காத்த கிளி போல் ஆனேன் 








என் இதயத்தில் கத்தி வைக்க

எப்படி முடிந்தது உன்னால்

என்று இன்னமும் என்னால்

இனம் காணமுடியவில்லை 

கண்ணாளனே!
   







காதலித்த காலங்களில்

காதலனே நீ என்னிடம் 

களவாடிய இதயத்தை

திருப்பி கொடுத்து என்னை 

தவணை முறையில் 

ஊனமாக்கி உயிர் விடவிடாமல்

நீயே உன் கையால் 

என்னை தீக்குள் இட்டு


கருணை மனுக் கொலை செய்து 

எனக்கு நின்மதியான தூக்கத்தை 

நிரந்தரமாய் கொடுத்ததுக்காய்  



நான் அழவில்லை 

ஆனந்தமடைந்தேன்.